Close
மார்ச் 7, 2026 3:27 மணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கில், மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் பேசினார். அருகில் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

உலக சுற்றுச்சூழல் மண்டலத்தை பாதுகாத்து நிலை நிறுத்துவதில் வனவிலங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. வனவிலங்குகள் உள்ள பகுதிகளில் மனித நடவடிக்கைகள் குறைக்கப்படும்போது, வன உயிரினங்களின் எண்ணிக்கை மேம்பாடு அடையும். தேசிய அளவில் புலிகளின் எண்ணிக்கை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சீரிய முயற்சிகளால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது என்றார்.

நாமக்கல் மாவட்ட கல்வி பயிற்சி நிலைய முதல்வர் செல்வம் நிகழ்ச்சியில் பேசியதாவது: மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, தாங்கள் வசிக்கும் ஊரக மற்றும் நகர்ப்புறச் சுற்றுச்சூழல்களிலும் மரங்களை நட்டு வளர்ப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.

இயற்கையைப் பேணுவது என்பது சமூகப் பொறுப்பாக மாணவர்களால் உணரப்பட வேண்டும். கடந்த காலங்களில் நம் முன்னோர்கள் மரங்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றியதின் விளைவாக அவர்களுக்கு ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்தது. இதனை இன்றைய இளம் தலைமுறை நினைவில் கொண்டு, அவற்றைப் பின்பற்றும் செயல்பாடுகளில் தங்களை உறுதியாக ஈடுபடுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து இயற்கையை பாதுகாப்போம்-நலமுடன் வாழ்வோம், போதை இல்லாத வாழ்வு -கல்லீரல் நலத்திற்கான வழி, புலிகளுக்கும் மனிதனுக்கும் இடையேயான மோதலை தவிர்க்கும் வழிகள், நட்பை செயல் வழியாக காட்டுவோம். ரத்த தானத்தின் முக்கியத்துவம் போன்ற தலைப்புகளில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் மோகனவேல், மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ்கண்ணன், விலங்கியல் துறை தலைவர் ராஜசேகரபாண்டியன் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் மற்றம் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top