நாமக்கல்லில் நடைபெற்ற யோகா போட்டியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்ட யோகாசன சங்கம், சித்தர் கருவூரார் யோகா மையம், ஓம்ஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து, மாநில யோகா போட்டிக்கான நாமக்கல் மாவட்ட அணி தேர்வு போட்டி, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட யோகாசன சங்க தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் வரவேற்றார். தொழில் அதிபர்கள் ஸ்கந்தகுமார், அபுபக்கர், ராஜேந்திரன் சின்னத்தம்பி ஆகியோர் யோகா போட்டியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
போட்டியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சேம்பியன் ஆஃப் சேம்பியன் பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சிறந்த முறையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டவர்கள், மாவட்ட யோகா அணிக்கு தேர்வு பெற்றனர். முடிவில் யோகாசன சங்க செயலாளர் ரவி நன்றி கூறினார்.



