நாமக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரை கண்டித்து, கல்குவாரி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர் வக்கீல் செந்தில்குமார், சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கனிமவளத்துறை சம்மந்தமாக, மனு கொடுக்க வரும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை, நாமக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலனின் ஒருமையில் பேசுவதாகவும், கனிமவளம் கொள்ளை தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாகவும் கூறி கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்குவாரி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் எலச்சிபாளையம் வட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




