தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கடந்த 33 ஆண்டுகளாக மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கிகள் எதுவும் துவக்கப்படவில்லை. தமிழகத்தில் மொத்தம் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், 24வது மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியாக நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களும், 4 மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களும், 393 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும், 86 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 26 பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்களும், 3 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களும், 5 கூட்டுறவு நகர வங்கிகளும், 7 தொடக்கக் கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளும் மற்றும் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட 746 சங்கங்கள் இணைக்கப்பட்டு செயல்பட உள்ளது.
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து டெபாசிட்டுகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட ரூ. 3,500 கோடி மதிப்பிலான வணிகம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்கள் எளிதில் பணம் பெறும் வகையில் ஏடிஎம் மெசின்கள் மற்றும் மொபைல் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி திறப்பு விழா, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிய வங்கியை தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் உதயநிதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் முருகானந்தம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அம்ரித், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை, வங்கியின் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் அவர், கூட்டுறவு கொடியேற்றி வைத்து, வங்கியின் மூலம் கடன் உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கலெக்டர் துர்காமூர்த்தி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாள் அருளரசு, வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




