சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற பிரமாண்ட தேசியக்கொடி பேரணியில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டார்.
இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாபெரும் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. நாமக்கல் நேதாஜி சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணிக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில பாஜ துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் பேரணியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
நாமக்கல்கடைவீதி, பழைய பேருந்து நிலையம், பார்க் ரோடு வழியாக நடைபெற்ற பேரணி, உழவர் சந்தை அருகில் காந்தி சிலை முன்பு முடிவுற்றது.
பேரணியில் ஏராளமான பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




