நாமக்கல்லில், தனியார் மருத்துவமனையில், பெயிண்ட் அடிக்கும் போது கிரேன் சரிந்து மின் கம்பியில் விழுந்ததில், 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் நகரில் திருச்சி மெயின் ரோட்டில் புதிய தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது, பெயின்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை எருமப்பட்டியைச் சேர்ந்த தனபால் (60) என்பவர் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இந்த நிலையில், எருமப்பட்டியை சேர்ந்த சுகுமார் (45), ஜோதி (44), கொசவம்பட்டியை சேர்ந்த முகேஸ்கண்ணன் (25), ஆகிய மூன்று பேரும், பெயிண்ட் அடிப்பதற்காக, கிரேன் மூலம் மருத்துவமனையின் 4வது மாடிக்கு சென்றனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் மைக்கேல் ஜீடே என்பவர் கிரேனை இயக்கினார். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கிரேன் 60 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே சரிந்து, அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது.
அதில், கிரேன் மேல் பகுதியில் உள்ள தொட்டியில் இருந்த 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், தொழிலாளிகள் சுகுமார், ஜோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த முகேஷ்கண்ணனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு,தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
கிரேன் சரிந்து கீழே விழுந்ததில், அப்பகுதியில் நிறுத்தியிருந்த கார் ஒன்று நொறுங்கியது. மேலும், அருகில் இருந்த மின்சார கம்பமும் முறிந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




