Close
மார்ச் 7, 2026 3:00 மணி

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று பரிசு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

2025&26ம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு திட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு, முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம், 2ம் பரிசாக ரூ. 1.50 லட்சம், 3ம் பரிசாக ரூ. 1 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்திற்கு கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, துவரை, பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, எள், கரும்பு ஆகிய 10 பயிர்களுக்கு போட்டிக்கான இலக்கு பெறப்பட்டுள்ளது.

சிறுதானிய பயிர்களான திணை, சாமை மற்றும் எண்ணெய் வித்து பயிரான எள் பயிர்கள் குறைந்தபட்சம், ஒரு ஏக்கர் சாகுபடி செய்யப்பட வேண்டும். மற்ற பயிர்கள் குறைந்த பட்சம் 5 ஏக்கர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் நில உடமைதாரர்கள் மற்றும் நில குத்தகைதாரர்களும், இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட பயிர்களை பயிர் செய்து, மாநில அளவில், அதிக அளவிலான உற்பத்தி செய்து, விவசாயிகள் பரிசு பெறலாம்.

போட்டியில் கலந்து கொள்வதற்கு ரூ. 150 பதிவு கட்டணம், அருகிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களை பெற தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top