மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண வைபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி கிராமத்தில், புராண சிறப்பு பெற்ற பிரகன் நாயகி உடனுறை பீமேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் சுற்றுச்சுவரில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் இக்கோவில், 1,700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வனப்பகுதியில் தவம் செய்த பீமன், காவிரி மணலை கையில் பிடித்து லிங்கம் உருவாக்கி வழிபட்டார் என்றும், பீமன் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால், பீமேஸ்வரர் என்ற பெயர் விளங்கியதாகவும், கல்வெட்டுகள் கூறுகின்றன.
இந்த கோயிலில் சுவாமி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, காலை 7 மணிக்கு கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் விநாயகர் உற்சவ திரிபுர சுந்தரர், திரிபுர சுந்தரி அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பக்தர்கள் சீர் தட்டு எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
காலை 10:45 முதல் 11 45 மணி வரை சிவாச்சாரியார்கள் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி, முறையாக சுவாமி திருக்கல்யாண வைபவ நிகழ்வை நடத்தினர். சுவாமிக்கு கங்கணம் கட்டுதல், திருமாங்கல்ய தாரணம் அணிதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் விமரிசையாக நடைபெற்றது.
அப்போது சிவனடியார்கள் கைலாய வாத்தியம் வாசித்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




