நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்து நடத்துவதற்கு, மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பண்ணை சார்ந்த, சாராத தொகுப்பின் உறுப்பினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: குழுவினர் உணவகத்திற்கு 5 முதல் 8 கி.மீ சுற்றளவில்இருக்கவேண்டும். ஏ அல்லது பி மதிப்பீடு பெற்றிருக்கவேண்டும் குழுவில் உள்ள 6 முதல் 8 உறுப்பினர்கள் தாமாக முன்வந்து உணவகத்தை நிர்வகிக்க வேண்டும். அங்காடி, விற்பனை நிலையங்கள் நடத்திய அனுபவம் பெற்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மின்னணு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும். குழுவிடம் உள் ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உடைய மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




