மதுரை இளைஞர்கள் இருவர், நாடு முழுவதும் சுற்றி வரும் விழிப்புணர்வு பிரசாரப் பயணத்தை ட்ரை சைக்கிள் மூலம் கடந்த 2023ம் ஆண்டு அன்று தொடங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.
மதுரை ஜீவாநகர் சிராஜ்தீன், வில்லாபுரம் அருண்குமார் இருவரும் நண்பர்கள். கல்லூரி காலத்திலிருந்தே சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டு, மரக்கன்றுகளை நடுவது, விலங்குகள் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு அளித்துப் பராமரிப்பது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.
தாங்கள் பார்க்கும் வேலையால் கிடைக்கும் ஊதியத்தில் ஒரு பகுதியை இது போன்ற சேவைகளுக்குச் செலவிட்டு வந்தனர். இந்நிலையில் பட்டதாரி இளைஞர்களான இவர்கள் இருவரும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் டிரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு மரக்கன்றுகளை நடும் பயணத்தை (07.06.2023) தொடங்கினா்.
இதில் 18,000 கி.மீ தூரத்துக்கு 800 நாட்களில் இந்தியாவைச் சுற்றி ட்ரை சைக்கிளில் பயணம் செய்து இன்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்திற்கு இருவரும் திரும்பியுள்ளனர். இவர்களின் விழிப்புணர்வு பயணம் வெற்றிகரமாக திரும்பி மதுரைக்கு வந்ததை ஒட்டி அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்கள்.
இதில், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், குரோனி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து செய்தியாளரை சந்தித்து இருவரும் கூறுகையில்,
கடந்த 2023 ஜூன்.07 ம் தேதி அன்று இந்தியா முழுவதும் பயணம் செய்ய முடிவு செய்து, இந்த சாதாரண ட்ரை சைக்கிளில் ஜெய்ஹிந்த் புரம் வீர காளியம்மன் கோயில் முன்பாக பயணத்தை துவங்கி நேற்று முன்தினம் (17.08.2025) வெற்றிகரமாக 806 நாட்களில் திரும்பி அதே மதுரை வீரகாளியம்மன் கோயிலுக்கு வந்துள்ளோம்.
29 மாநிலத்தையும் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேலாக கடந்த வந்துள்ளோம். 638 மாவட்டங்களையும் கடந்து வந்துள்ளோம். அதே மாதிரி ஒவ்வொரு பரப்பு நிலைகள், கலாச்சாரம், பண்பாடு, உயிரினங்கள் ஆய்வு செய்து அங்கு தங்கி உள்ளோம்.
2,000 மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளோம். லடாக்கிலும் காஷ்மீரிலும் பாகிஸ்தான் எல்லையிலும் மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளோம். உலகிலேயே நாங்கள் தான் முதல் முறை இந்த ட்ரை சைக்கிளில் இந்தியாவை சுற்றி வந்துள்ளோம்.
மற்ற மாநிலங்களில் நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று கேட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து வருகின்றோம் என்றதும் மிக பிரமிப்பாக பார்த்து, தமிழ்நாட்டில் இருந்து இப்படியெல்லாம் கூடவா வருவீர்கள் என்று எங்களிடம் கேட்டார்கள்.
ஹோட்டலில் தங்காமல் மக்களோடு மக்களாக ஆங்காங்கே கூடாரம் செய்து தங்கி உள்ளோம். அவர்களின் உணவு கலாச்சாரம் பண்பாடு பின்பற்றி வாழ்ந்து வந்தோம். 18 ஆயிரம் அடி கொண்ட பாலைவனம் மற்றும் அதிகமான குளிர் வெயில் கடந்து ட்ரை சைக்கிளும் நாங்களும் வந்துள்ளோம்.
இதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் உதவி செய்தார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அன்பாக இருக்கிறார்கள்.
மேலும், “பூமி வெப்பமயமாதலைத் தடுத்தல், உலக அமைதி, போதை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமைகள் இல்லா சமூகம், மனித நேயத்தை வளர்த்தல் போன்றவற்றை வலியுறுத்தி இந்தியா முழுவதும் ட்ரை சைக்கிளில் சென்றோம்.
இந்தப் பயணத்தின்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அங்கு விதைப்பந்துகளை வீசியும், மரக்கன்றுகளை நட்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தோம்.
நாங்கள் இருவரும் இந்து – முஸ்லிம் நண்பர்கள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இருவரும் பயணம் மேற்கொண்டோம். அனைத்து மாநிலங்களிலும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்கள் எங்களுக்கு மதம் மொழி பாராமல் பல்வேறு நல்ல உதவிகளை செய்தார்கள்.
நமது இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்று சிலர் கூறுவது தவறு. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிக்காத ட்ரை சைக்கிளைத் தேர்வு செய்தோம். எந்தச் சூழலிலும் ஓட்டும் வகையில் இதற்காக 6 மாதம் பயிற்சி எடுத்தோம்.
ஒருநாளைக்கு 150 கிலோ மீட்டர் தூரம் செல்லத் திட்டமிட்டு இருந்தோம். எங்களுக்கு ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகள் தெரியும். அதனால் செல்கிற இடங்களில் மொழிப்பிரச்சனை இல்லை. இது ஒரு நல்ல பயணமாக அமைந்தது.
இந்த பயணத்தில் திண்டுக்கல், கோயம்புத்தூர் வழியாக கேரளா சென்று பின்னர் கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மும்பை, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, அஸ்ஸாம், பீகார், நாகாலாந்து, மிசோரம், பின்னர் ஒடிசா வழியாக ஆந்திராவில் தங்களது விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்து வெற்றிகரமாக இன்று திரும்பியுள்ளோம், என்று கூறினார்கள்.




