நாமக்கல் அருகே கோயில் திருவிழாவில் கட்டளை பூஜை செய்ய தனிநபர் ஒருவருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி திரளான பொதுமக்கள், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் அடுத்த ஏளூரில் பிரசித்தி பெற்ற பண்ணையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, இக்கோயில் திருவிழா ஒரு சில தினங்களில் நடைபெற உள்ளது.
திருவிழாவின் போது ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் கட்டளை பூஜை செய்ய நாள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் ஏளூரைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு கட்டளை பூஜை செய்ய இந்து சமய அறநிலையத் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கு ஏளூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இப்பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து கட்டளை பூஜை செய்ய தனிநபருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை மேம்பாலம் அருகே ஏளூர் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ்ஜோஷி தலைமையிலான போலீசார், வருவாய் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பண்ணையம்மன் கோயில் திருவிழாவில் தனிநபர் ஒருவருக்கு கட்டளை பூஜை செய்ய வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும் என்றனர்.
அவர்களை சமரசம் செய்த போலீசார் இந்து சமய அறநிலையத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




