Close
மார்ச் 7, 2026 7:19 மணி

பிளஸ் 2 அக்கவுண்டன்சி பொதுத்தேர்வில் கால்குலேட்டர்கள் அனுமதிக்க வேண்டும்: முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னையில், தமிழக பள்ளிக்கல்வி தேர்வுகள் துறை இயக்குனர் சசிகாலாவை, நேரடி நியமனம் பெற்ர முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

பிளஸ் 2 வகுப்பு அக்கவுண்டன்சி பொதுத்தேர்வில், கால்குலேட்டர்கள் அனுமதிக்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு மற்றும் நிர்வாகிகள், சென்னையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் தேர்வுகள் துறை இயக்குனர் சசிகலாவை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அரசுத்தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் கலைப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வுக்கு இயல்பான கால்குலேட்டர் பயன்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

இதேபோல், நடப்பாண்டில் கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) பாடத்திற்கும் இயல்பான கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் கலைப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். இதனால் அதிகமான கலைப் பிரிவு மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயில இது பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

எனவே 2025ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணக்குப் பதிவியல் பாடத் தேர்வுக்கு இயல்பான கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதி வழங்கவேண்டும்.

மேலும், பிளஸ் 2 வகுப்பு, தமிழ் வினாத்தாளில் தற்போது 14 ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே (சரியான விடைப் பகுதி) உள்ளன. வினாத்தாளில் பகுதி 3 பிரிவு 3 ல் உள்ள தமிழாக்கம் பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ள 6 மதிப்பெண் பகுதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக 6 ஒரு மதிப்பெண் வினாக்களை சரியான விடைப் பகுதியில் சேர்த்து மொத்தமாக 20 ஒரு மதிப்பெண் வினாக்களாக உயர்த்தித் தர வேண்டும்.

இதற்கான காரணங்கள் பல இருந்தாலும், முக்கிய காரணம், பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் தற்போது 14 ஒரு மதிப்பெண் வினாக்கள் (சரியான விடைப்பகுதிகள்) மட்டுமே உள்ளன. ஆனால் பிளஸ் 2 வகுப்புகளில் பிற பாடங்களுக்கான, பொதுத்தேர்வு வினாக்களில் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக பகுதியில் கொடுக்கப்பட்டு உள்ளன.

எனவே நடப்பாண்டில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ் வினாத்தாளில் பகுதி 3, பிரிவு 3 ல் உள்ள 6 மதிப்பெண்கள் கொண்ட தமிழாக்கம் பகுதியை நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக 6 ஒரு மதிப்பெண் வினாக்களை சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக பகுதியில் சேர்த்து வினாத்தாள் அமைப்பு முறையை மாற்றித் தர வேண்டும்.

இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்து தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top