Close
மார்ச் 7, 2026 2:32 மணி

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு 47,253 பேர் பதிவு: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கலில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்குபெற, 47,253 பேர் பதிவு செய்துள்ளனர் என தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றவுடன், 2023 முதல், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகைக்காக ரூ. 37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, போட்டிகள் சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான, மொத்த பரிசுத்தொகையாக ரூ. 53.40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம், உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில் 25 விளையாட்டுக்கள், மண்டல அளவில் 7 விளையாட்டுக்கள், மாநில அளவில் 37 வகையான போட்டிகளும் நடத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 2024ம் ஆண்டில் 31,566 பேர் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு பதிவு செய்தனர். நடப்பு ஆண்டில் 47,253 பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு 15,687 பேர் அதிகமாக பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் கோகிலா மற்றும் அரசு துறை அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top