தமிழகத்தில், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், நாமக்கல் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல், நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் அலுவலர்களாக பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் சுந்தரம், எருமப்பட்டி ஒன்றியச் செயலாளர் செல்வராஜூ ஆகியோர் பொறுப்பேற்று தேர்தலை நடத்தினர். நாமக்கல் ஒன்றியப் பொறுப்பாளர்களாக 52 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலுக்கு பிறகு ஒன்றியத் தலைவர் ஜீவாஜாய் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, காலம் தாழ்த்தாமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடிடயாக அமல்படுத்த வேண்டும்.
- தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கிட வேண்டும்.
- உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தேர்தல் அறிக்கை உறுதிமொழியின் படி தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
- ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியின்றி, ஒன்றிய மற்றும் நகராட்சி பணிமூப்பின் படி பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகள் உடன் வழங்கிடல் வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்றப் பொறுப்பாளர்கள் செல்வராணி, கவுரி, சிவபார்வதி, ஞானவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் வடிவேல், கனகலிங்கம் உட்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியப் பொருளாளர் வெண்ணிலா நன்றி கூறினார்.




