அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின், பள்ளி மாணவர்களுக்கான நல் விருந்து திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு, நாள்தோறும் வழங்கப்படும் மதிய உணவுக்கு மாற்றாக, விஷேச நாட்களில் முக்கிய பிரமுகர்களின் ஆதரவில், வாழை இலையில் விருந்து பரிமாறும் திட்டம் ஏற்கனவே நடைபெற்று வந்தது.
2020ம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நல் விருந்து திட்டம் தற்போது தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் நல் விருந்து திட்ட துவக்க விழா நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மகேஸ்வரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாணவர்களுக்கு விருந்து வழங்கி, அவர்களுடன் அமர்ந்து விருந்து உண்டார். பள்ளியின் முதுகலை ஆசிரியை சுதா அவர்களின் ஆதரவால் சுமார் 320 மாணவ மாணவிகளுக்கு நல்விருந்து வழங்கப்பட்டது.
மாவட்ட பள்ளி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுடன் உணவு அருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்கள்.




