Close
மார்ச் 7, 2026 7:19 மணி

நாமக்கல் அருகே 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வள்ளிபுரம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, நாமக்கல் - பரமத்தி மெயின் ரோட்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வள்ளிபுரம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால், பாதிப்படைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளிபுரம் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக அப்பகுதிக்கு குடிநீர் சப்ளை முழுமையாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள், 100க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன், நேற்று காலை, 6:30 மணிக்கு, நாமக்கல் – பரமத்தி மெயின் ரோட்டின் குறுக்கே காலி குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

அப்போது, உடனடியாக லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் நடத்திய திடீர் மறியல் போராட்டத்தால், நாமக்கல் – பரமத்தி மெயின் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top