Close
மார்ச் 7, 2026 4:40 மணி

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியூர் பேருந்துகள் வராவிட்டால் சிறை பிடிக்கும் போராட்டம்: விவசாய முன்னேற்ற கழகம் எச்சரிக்கை

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்குள் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லாவிடில், பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என விவசாய முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் முதலைப்பட்டியில், நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் பல மாவட்டங்களில் இருந்து வரும் ஓன் டூ ஓன், பாயிண்ட் டூ பாயிண்ட், பை பாஸ் ரைடர் போன்ற தொலைதூர பேருந்துகள் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் வராமல், நேரடியாக தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கிறது.

இதனால் நாமக்கல்லில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக் கிடந்தும் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருவதில்லை.

எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உடனடியாக நாமக்கல் வழியாக செல்கின்ற அனைத்து பேருந்துகளையும் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர் மற்றும் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகமும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

வருகிற செப். 30க்குள், பை-பாஸ் வழியாக செல்லும் அனைத்து வெளியூர் பேருந்துகளும், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாவிடில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை ஒன்று திரட்டி பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top