திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 522 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தைவைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதிபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி அம்ருதா எஸ்.குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் அனைத்து துறைச்சார்ந்தஅரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்யார்
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 66 மனுக்களும்,
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 51 மனுக்களும் பெறப்படு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் செய்யார் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆரணியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் தனிநபா் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிக்கை
கலசப்பாக்கம் வட்டம், காளிங்காபுரம் ஊராட்சி லாடவரம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் கோட்டாட்சியரிடம், கோரிக்கை மனு அளித்தனர்.
லாடவரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இதில் லாடவரம் கிராமத்துக்குச் செல்லும் பாதை 70 ஆண்டுகளாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா். இப்பாதையை தற்போது தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கிராமத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியரிடம், நான்கு ஆண்டுகளாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதலால், கிராமத்திற்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி செய்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனா்.




