திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை – பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பெற்ற உடன் கிராமங்களில் உள்ள மக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பாலங்களை கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி புதுப்பாடி,இலுப்வை வட இலுப்பை, பெரும்பாக்கம், விஷார், காஞ்சிபுரம் சாலை பாலாற்றின் குறுக்கே ரூ.29:10 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தின் மொத்த நீளம் 3 ஆயிரத்து 16 மீட்டர் அகலம் 10.50 மீட்டராகும்.
இந்த பாலம் குறிப்பிட்ட காலத்தை விட விரைவாகவும், தரமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் வாயிலாக இலுப்பை, வட இலுப்பை, புதூர், செய்யனூர் , பிரம்மதேசம். பெரும்பாக்கம், கிளார் முத்துவேடு , பிச்சுவாடி ஆகிய கிராமங்கள் பயன்பெறுவதோடு அதன் சுற்றுவட்டார பகுதிக்கு செல்ல மிகவும் பயனுள்ளதாக அமையும். இதனால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள்.
இந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக செய்யாறு, ஆற்காடு, திண்டிவனம், காஞ்சிபுரம், திருவத்திபுரம், காஞ்சிபுரம், வந்தவாசி ஆகிய 3 வழித்தடங்களில் ரூ. 126 கோடி மதிப்பீட்டில் 105 கிலோமீட்டர் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் 39 கோடி மதிப்பீட்டில் 13 ஊராட்சி ஒன்றிய சாலைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செய்யாறு பகுதியில் உள்ள 5 உயர் மட்ட பாலங்கள் ரூ.46 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதியின் கோரிக்கை
எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும் காஞ்சிபுரம் – செய்யாறு இடையே பாலாற்றுப் பகுதியில்,செய்யாறு எம்எல்ஏ ஜோதியின் கோரிக்கையை ஏற்று ரூ.60 கோடியில் கூடுதலாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
செய்யாறு வழியாக ஆற்காடு – திண்டிவனம், காஞ்சிபுரம் – வந்தவாசி ஆகிய சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ.166 கோடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ரூ.81 கோடியில் 16 கி.மீ. தொலைவு சாலைகள் நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ரூ.25 கோடியில் 29 கி.மீ. தொலைவிலான சாலையை மேம்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம் என்றாா் .
இந்த விழாவுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் தரணிவேந்தன் முன்னிலை வகித்தாா். செய்யாறு சாா் -ஆட்சியா் அம்பிகா ஜெயின் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளா் (நெடுஞ்சாலை – திட்டங்கள்) கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, எம்.எல்.ஏ.க்கள் ஜோதி (செய்யாறு), அம்பேத்குமாா் (வந்தவாசி), எழிலரசன் (காஞ்சிபுரம்), சுந்தா் (உத்திரமேரூா்), திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றத் தலைவா் மோகனவேல், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கண்காணிப்புப் பொறியாளா் (திட்டங்கள்) வத்சலா விஜயானந்தி நன்றி கூறினாா்.




