நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
2025-&2026-ஆம் கல்வியாண்டிற்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில், மாவட்ட அளவிலான சேர்க்கை கலந்தாய்வு மூலம் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நடைபெறும் சான்றிதழ் பாடப்பிரிவுகள்:
எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் (1ஆண்டு), அனெஸ்தீசியா டெக்னீசியன் (1 ஆண்டு), ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன் (1ஆண்டு), ஆர்த்தோபோடிக் டெக்னீசியன் (1ஆண்டு/ஆண்கள் மட்டும்), பல்நோக்கு சுகாதார உதவியாளர்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தமாக 56 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்கள் தொடர்பான விவரங்களை gmcnkl.tn.gov.in என்ற வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். அல்லது மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையிலும் அறிந்துகொள்ளலாம்.
சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 31.12.2025 அன்று 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை (கட்டணமில்லை):
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திலும், மருத்துவக்கல்லூரி அலுவலகத்திலும் விண்ணப்ப படிவங்கள் கட்டணமின்றி வழங்கப்படும். உரிய முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான இணைப்புகளுடன், வருகிற 12ம் தேதிக்குள் கல்லூரி முதல்வர் அல்லது துணை முதல்வர் அலுவலகத்தில் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



