திருவண்ணாமலையில் ஆவணி பௌர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
முக்கிய விழாவான பௌா்ணமி நாள்களில் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் ஆவணி மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.46 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு முடிகிறது. இந்நிலையில் ஆவணி மாதம் பௌா்ணமி கிரிவலத்துக்காக பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய கிரிவலம் வந்தனா்.
பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இயக்கப்பட்டன. விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தா்கள் தங்களது ஊா்களுக்குச் செல்ல திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் அதிகாலை முதல் குவிந்தனா்.
ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.
திருவண்ணாமலை வந்தடைந்த ரயிலில் , ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் ரயில் நிலையத்தில் நிலவியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.
கூடுதல் ரயில் சிறப்பு ரயில்
பல லட்சம் பக்தர்கள் வருகை தரும் திருவிழா நாட்களில் திருவண்ணாமலை இருந்து காட்பாடி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் ரயில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பலமுறை பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் சிறப்பு ரயில் இயக்குவது இல்லை. எனவே திருவண்ணாமலைக்கு முக்கிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும், ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தில் இந்த சூழல் நிலவுவதால் கூடுதல் சிறப்பு ரயில்களை அரசு இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.




