இபிஎஸ்சிற்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் உள்ளிட்ட யாரையும், பாஜவினர் யாரும் சந்திக்க மாட்டார்கள் என மாநில பாஜக துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூறினார்.
வருகின்ற 19, 20, 21 ஆகிய நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நாமக்கல் மாவட்டத்தில், தீவிர சுற்றுப்பயணம் செய்து ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் முக்கிய இடங்களில் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்.
அவரது சுற்றுப்பயணத்தில் பாஜகவினர் திரளாக பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடைபெற்றது. பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் டாக்டர் சரோஜா, ப.வேலூர் எம்எல்ஏ சேகர், கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன், மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று இபிஎஸ் தமிழக முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. இபிஎஸ் செல்லும் இடமெல்லாம் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடி அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதை மக்கள் குறிக்கோளாக வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், கடந்த 2024 சட்டசபை தேர்தலில், பாஜ, அதிமுக தனித்தனியாக போட்டியிட்டபோதும், 2 சட்டசபை தொகுதிகளில் அதிமுக கூடுதல் ஓட்டு பெற்றுள்ளது.
தற்போது கூட்டணி அமைந்துள்ள நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இதுவரை இல்லாத அளவு அதிமுக மற்றும் பாஜகவினர் கலந்துகொண்டு, மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் நாமக்கல் மாவட்டத்தில் அவருக்கு சிறப்பாக ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்ட முடிவில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சிற்கு எதிராக செயல்படும் யாரையும் தேர்தல் முடியும் வரை பாஜக சந்திக்காது. கொள்ளையடித்த பணத்தை மாதந்தோறும் பிரித்துக் கொடுத்து, இஎம்ஐ வழங்கி கூட்டணியை திமுக வலுவாக வைத்துள்ளது.
பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை நிறுவிட, அதை வெற்றி கரமாக நிகழ்த்திட, இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் 19, 20, 21 ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதில் பாஜக சார்பில் திரளாக கலந்து கொள்ள உள்ளோம், நவம்பர் மாதத்தில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார்.
செங்கோட்டையன் சொல்லும் ஒருங்கிணைந்த அதிமுக கான்செப்ட்டே தவறு, செங்கோட்டையன் கருத்துக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமும் இல்லை, முதல் நாளிலேயே இபிஎஸ்தான் முதலமைச்சர் என அமித்ஷா தெரிவித்துவிட்டார், தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் இபிஎஸ்தான்.
கூட்டணிக்கு யாரை சேர்க்க வேண்டும், சேர்க்க கூடாது என கூட்டணி தலைவர் இபிஎஸ்தான் முடிவு செய்வார். மேலும் அதிமுக ஆட்சியை அமைப்பதே பாஜகவின் நோக்கம். பாஜக தலைவரை விமர்சனம் செய்தால் நாங்கள் தினகரனை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும், ஓட்டு பிரிக்க, தனிப்பட்ட பொறாமையில் கட்சியை ஆரம்பித்துவிட்டு அவர் இவ்வாறு பேசக் கூடாது,
தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த செங்கோட்டையன் போல மேலும் பலர் வருவார்கள், ஆனால் அது தேர்தலில் எதிரொலிக்காது, பாஜக நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனை சந்திக்க தயாராக இல்லை. இபிஎஸ்சிற்கு எதிராக செயல்படும் யாரையும் தேர்தல் முடியும்வரை பாஜக சந்திக்காது இவ்வாறு அவர் கூறினார்.




