Close
மார்ச் 7, 2026 6:03 மணி

ஆயில் நிறுவன வாடகை ஒப்பந்த அறிவிப்பில் குளறுபடி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பு

நாமக்கல்லில் நடைபெற்ற கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் மகேஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

மத்திய அரசுக்கு சொந்தமான, ஆயில் நிறுவன வாடகை ஒப்பந்த அறிவிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் ஏராளமான கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் டெண்டர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் புல்லட் கேஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய வாடகை ஒப்பந்தத்தில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஏராளமானோர் தங்கள் லாரிகளுக்கு டெண்டர் கிடைக்காமல் லாரிகளை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளதாக, கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

இச்சூழலில் வாடகை ஒப்பந்தம் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்காத கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய வாடகை ஒப்பந்தத்தில் நடைபெற்ற குளறுபடி, அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேசினர்.

இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் மகேஷ்குமார் கூறியதாவது:

ஐஓசி, பிபிசி, ஹெச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களும் அடுத்த 3 ஆண்டுகளுக்கான வாடகை ஒப்பந்தத்தை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்து மே மாதம் நிறைவு செய்தனர். இந்த ஒப்பந்த அறிவிப்பின் ஆரம்பம் முதலே வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. குறிப்பாக இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு, பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ஆயில் நிறுவனத்தினர் விதித்திருந்தனர்.

இந்த விதிமுறைகளை மீறி சில டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தம் பெற்றுள்ளனர். இதற்கு ஆயில் நிறுவனத்தினரும் உடந்தையாக உள்ளனர். இதன்காரணமாக இத்தொழிலை வாழ்வாதரமாக கொண்ட ஏராளமான டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை ஒப்பந்தம் கிடைக்கவில்லை.

சுமார் 400க்கும் மேற்பட்ட கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை ஒப்பந்தம் கிடைக்கவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லாரிகளை ஒட்டாமல் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் முறையிட உள்ளோம். சங்கம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதில் தீர்வு கிடைக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். வாடகை ஒப்பந்தம் கிடைக்காத டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம் என்று அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top