Close
மார்ச் 7, 2026 4:17 மணி

கடத்தல் விவகாரத்தில் சிக்கிய பள்ளிபாளையம் பிடிஓ சஸ்பெண்ட்

கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள, பள்ளிபாளையம் பிடிஓ மற்றம் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் ஜெட்டிக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (53). இவர் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பிடிஓவாக பணிபுரிந்து வந்தார்.

செப்.5ம் தேதி வீட்டில் இருந்து தனது காரில் பணிக்கு சென்றுள்ளார். அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பிரபாகரனை அவரது மனைவி யசோதா செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் நாமக்கல் – திருச்செங்கோடு ரோட்டில் வேலகவுண்டம்பட்டியில் அவரது கார் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி யசோதா இச்சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் பிரபாகரனை காணவில்லை என புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் அடுத்த நாள் 6ம் தேதி பிடிஓ பிரபாகரன் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்டதாக கூறி பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூர் ஊராட்சி செயலாளர் நந்தகுமார் (42) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட, ஈரோடு வைராபாளையத்தை சேர்ந்த சிவா (29) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வந்தனர்.

இச்சூழலில் இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் கூறுகையில், கடத்தப்பட்ட பிடிஓ பிரபாகரன் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் பிடிஓ பிரபாகரனையும், காடச்சநல்லூர் ஊராட்சி செயலாளரையம் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்.

 பிடிஓ பிரபாகரன் மீது இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top