தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் விலையை, உடனடியாக அரசு உத்தரவாக வெளியிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 2025-2026 கரும்பு அறவை பருவத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 ஆதார விலையாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி 4 மாதங்கள் கடந்த பின்னும், தமிழ்நாடு அரசு, இதனை நடைமுறைப் படுத்தவில்லை. வருகிற அக்டோபர் மாதம் கரும்பு அறவை பருவம் தொடங்கப்படவுள்ள நிலையிலும் கூட தமிழ்நாடு அரசு அறிவித்த ஆதார விலைக்கு இன்னும் அரசு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக தமிழக விவசாயிகள் நலன் கருதி, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் ஆதார விலைக்கான அரசு உத்தரவு பிறப்பித்து, கெஜட்டில் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




