Close
மார்ச் 7, 2026 5:48 மணி

நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத்தை செலுத்த தள்ளுபடி வழங்க வேண்டும்: மாநில லாரி சம்மேளனம் கோரிக்கை

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத்தை தள்ளுபடியுடன் செலுத்த காலக்கெடு நீடித்து உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்த இயலும் என, இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து, சென்னை மாநகர காவல்துறை புதிய நடைமுறையை கையாள நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த புதிய நடைமுறை, லாரி உரிமையாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது லாரி தொழிலை மேலும் நலிவடையச் செய்யும். தமிழகத்தில் லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நிலையில், தமிழக காவல்துறை ரோட்டில் செல்லும் வாகன எண்களை குறித்து வைத்துக் கொண்டு, ஆன்லைன் அபராதம் விதிப்பதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு விதிக்கப்பட்ட ஆன்லைன் அபராதத் தொகையை எப்.சி. சான்று பெற செல்லும் வாகனங்களிடம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, சென்னை மாநகர காவல்துறை, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிமியத்தை செலுத்த, நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில், காவல்துறையின் ஆன்லைன் அபராதங்களை, 50 சதவீதம் தள்ளுபடியுடன் செலுத்த வாகன உரிமையாளர்களுக்கு, அம்மாநில அரசு, 2 முறை வாய்ப்பளித்து உத்தரவிட்டிருந்தது.

அதேபோல், நமது மாநிலத்திலும், வாகன உரிமையாளர்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், சென்னை மாநகர காவல்துறையின் இந்த புதிய நடவடிக்கையினால், வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்த இயலாமல், வாகனங்களை இயக்கினால், அதனால் ஏற்படும் விளைவுகள், மேலும் பல குற்றங்களுக்கு வழிவகுக்கும்.

அதனால், காவல்துறையின் இந்த நடவடிக்கையை லாரி உரிமையாளர்களின் சார்பாக கண்டிக்கிறோம். தமிழக முதல்வர் இந்த பிரச்சினையில் தலையிட்டு, நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதங்களை தள்ளுபடியுடன் செலுத்த குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top