Close
மார்ச் 7, 2026 3:10 மணி

தந்தை கண் எதிரில் காதலிக்கு நடுரோட்டில் தாலி கட்டிய காதலன்! நாமக்கல்லில் பரபரப்பு

கல்லூரி காதலிக்கு, அவரது தந்தை முன்பு, நடுரோட்டில் காதலன் தாலி கட்டிய சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் நகரில், ஏ.எஸ்.பேட்டை கே.கே.பி., தெருவை சேர்ந்தவர் தண்டபாணி, இவரது மகள் நந்தினி (21). இவர், திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ., இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

ராசிபுரம் கோனேரிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அஜய் (26). இன்ஜினியரிங் பட்டதாரியான இவரும், நந்தினியும் தூரத்து உறவினர். இருவரும், சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு, நந்தினி வீட்டுக்கு சென்று அஜய் பெண் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு நந்தினியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 12ம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி நந்தினி, செல்போனில் அஜய்யை அழைத்து, இன்று மாலை என்னை உன்னுடன் கூட்டி சென்று விடு, இல்லை என்றால் எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என கூறியுள்ளார்.

பின்னர், செல்போனில் போனில் பேசிய நந்தினி, தான் கல்லூரியில் இருந்து பேருந்தில்சில் கிளம்பி விட்டதாகவும், நாமக்கல் சேலம் ரோடு சந்திப்பில் இறங்குகிறேன். நீ என்னை வந்து அழைத்துச் சென்று விடு எனக் கூறியுள்ளார்.

அஜய் ஒரு வாடகை காரில், தன்னுடன் தனது மாமா உள்ளிட்ட சிலரையும் அழைத்துக் கொண்டு, சேலம் ரோட்டில் இறங்கிய அந்த பெண்ணை காரில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றார்.

அப்போது, நந்தினியை அழைத்து செல்ல காத்திருந்த அவரது தந்தை தண்டபாணி அதிர்ச்சி அடைந்தார். சத்தம்போட்ட அவர் காரை வழிமறித்தார். மேலும், தனது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு திரண்ட உறவினர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நந்தினி மற்றும் அஜய் இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர். நாம் பிரிந்து விட்டால் மீண்டும் சேர முடியாது. கல்லூரிக்கும் அனுப்ப மாட்டார்கள். உன்னோடும் பேச முடியாது என மாணவி கெஞ்சியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய், தான் தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து நந்தினி கழுத்தில் கட்டியுள்ளார். மேலும், தன்னிடம் இருந்த மோதிரத்தையும் நந்தினிக்கு அணிவித்துள்ளார்.

கோபமடைந்த, நந்தியின் உறவினர்கள் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்த நாமக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் மீட்டு, நாமக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், இருவரும் திருமண வயதை கடந்துள்ளதால், காவல்துறையினர் சமரசம் செய்தனர். நடுரோட்டில் தந்தை கண் எதிரில் காதலன், காதலிக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்ட சம்பவம், நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top