நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 862 பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஜூலை 2ம் தேதி முதல் தமிழகமெங்கும் ஓட்டுச்சாவடி வாரியாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறப்பட்டு வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 835 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. ஓட்டுச்சாவடி முகவர்கள் தங்கள் பகுதிகளில், வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றனர்.
மேலும் மத்திய அரசின் நீட் திட்டத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், தொகுதி சீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு விளக்கி கூறி அனைவரும் திமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
அப்போது ஏராளமான பொதுமக்கள் தாமகவே முன்வந்து திமுகவில் உறுப்பினர்களாக இணைகின்றனர். ஏற்கனவே திமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்கின்றனர்.
அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, நாமக்கல் சட்டசபை தொகுதியில் 1லட்சத்து 51 ஆயிரத்து 838 பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 57 சதவீதமாகும்.
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 252 பேர் திமுக உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது மொத்தம் வாக்காளர்களில் 64.7 சதவீதமாகும்.
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 780 பேர் திமுகவில் வாக்காளர்களாக இணைந்துள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 64 சதவீதமாகும்.
3 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 862 பேர் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மாநில அளவில் நாமக்கல் கிழக்கு மாவட்டம், உறுப்பினர் சேர்க்கையில் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளது என்றுகூறினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்தவர்கள், மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி. முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




