Close
மார்ச் 7, 2026 5:48 மணி

திமுகவினர் வாக்குத்திருட்டால் குமாரபாளையம் நகரில் 15,000 வாக்குகள் இல்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

முன்னாள் அதிமுக., அமைச்சர் தங்கமணி.

திமுகவினர் வாக்கு திருட்டால், குமாரபாளையம் நகரத்தில், 15,000 வாக்காளர்கள் இல்லை. போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்ற பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில், வரும் 19, 20, 21 என, 3 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், தமிழகத்தை மீட்போம்; மக்களை காப்போம் என்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு வரும் நேரத்தில், வரவேற்கும் கூட்டம் தான், தேர்தல் கூட்டம் என்று மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும்.

இந்த சுற்றுப்பயணம் கூட்டம் முடிந்த பின், ஒவ்வொரு தொகுதியிலும், இறந்த வாக்காளர்கள், அடையாளம் தெரியாத வாக்காளர்கள் என்று கட்சியினர் பட்டியலை தொகுத்து, மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும். ஆட்சியர் நீக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாட வேண்டும்.

கரூரில், 10,000 வாக்குகள் அதேபோல் உள்ளது. மேலும், குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, குமாரபாளையம் நகராட்சி பகுதியில் 15,000 வாக்காளர்கள் இல்லை. தற்போது ஆட்சி அதிகாரம் அவர்களிடத்தில் உள்ளது.

வாக்கு திருட்டு என்று சொல்கிறார்கள். திமுகவினர்தான் வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றனர். இறந்த வாக்காளர்கள், அடையாளம் தெரியாத வாக்காளர்கள் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். நீக்க வேண்டும் என்று, பி.எல். 2 எழுதி கொடுத்தால் தான் நீக்க முடியும் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.

ஒவ்வொரு பூத்திலும், 20 முதல், 30 வாக்குகள் என, நாம் ஏமாந்து விடக் கூடாது. அதிகாரிகள் போலி வாக்காளர்களை நீக்கவில்லை என்றால், வக்கீல் அணியை வைத்து நீதிமன்றத்தை  அணுகவும் தயார் என்று கூறினார் .

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஜெ., பேரவை செயலர் சந்திரசேகர், மாநில வக்கீல் அணி பிரிவு துணை தலைவர் பாலுசாமி, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top