திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ, கடனுதவி, புதிய நீா்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 554 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதிபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி அம்ருதா எஸ்.குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் அனைத்து துறைச்சார்ந்தஅரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறை தீர்வு நாள் நிகழ்ச்சியை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 24 நபர்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்கும் மாணவ/மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை (அ) தாய் விபத்தில் இறந்து விட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ/மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.75000/- நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் காப்பீடு பத்திரங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 16 மாணவர்களுக்கு வழங்கினார்.




