Close
மார்ச் 7, 2026 3:00 மணி

நாமக்கல் கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 90 லட்சம்: கலெக்டர் தகவல்

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில், கலெக்டர் துர்காமூர்த்தி தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் கோஆப்டெக்ஸ் ஷோரூமில், ரூ. 90 லட்சம் தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

நாமக்கல் மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள, கோ ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி குத்துவிளக்கேற்றி, தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம், 1935ல் தொடங்கப்பட்டு, 90 ஆண்டுகளாக, தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும், தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்குவதற்காக, விழா காலங்களில், 30 சதவீதம் வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளிக்காக புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சை பட்டு புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.

பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவ வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு, நாமக்கல் மாவட்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு, ரூ. 90 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ -ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து, மாதந்தோறும், ரூ. 300 முதல், 3,000 வரை சேமித்து, இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு, வட்டியில்லா கடன் வசதியில், 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது என்று கூறினார்.

கோ- ஆப்டெக்ஸின் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மேலாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள், ஓய்வு பெற்ற மேலாளர் ஆறுமுகம், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top