Close
மார்ச் 7, 2026 2:53 மணி

நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.50 கோடி கல்விக்கடன் இலக்கு: அமைச்சர்

நாமக்கல்லில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கல்விக்கடன் உதவி வழங்கினார். அருகில் கலெக்டர் துர்காமூர்த்தி, எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர்.

நாமக்கல் மாவட்டத்தில், 2,000 மாணவ, மாணவியருக்கு கல்வி கடனாக ரூ. 50 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில், கல்வி கடன் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 161 மாணவ, மாணவியருக்கு, ரூ. 14.23 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு அரசு, நாமக்கல் மாவட்டத்திற்கு, கல்வி கடனாக, 2,000 மாணவ, மாணவியருக்கு ரூ.50 கோடி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய, நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து, கல்விக்கடன் முகாம்களை கிராம ஊராட்சி, மற்றும் வட்டார அளவில், கடந்த மாதம் முதல் நடத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்வி கடன் முகாமில், இன்று 161 மாணவ, மாணவியருக்கு ரூ. 14.23 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி கடன் என்பது, மாணவ மாணவிகளை வாழ்வில் முன்னேற்றம் அடைய செய்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. வங்கி கடனை திரும்ப செலுத்துவது காலதாமதமானால், உங்களது சிபில் ஸ்கோர் என்பது பாதிக்கப்படும் என கூறினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மலர்விழி, துணைப் பொது மேலாளர் தாமோதரன் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top