நாமக்கல் நகரில், வீட்டில் கொள்ளையடிப்பதற்காக காத்திருந்த 5 வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர் , அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் – திருச்சி ரோட்டில் ரயில்வே மேம்பாலத்தின் அடியில், மாலை 3 மணியளவில், சட்ட விரோதமாக, 5 வாலிபர்கள் நின்று கொண்டிருப்பதாக, நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் பாலுசாமி தலைமையில், போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர்.
காவல்துறையினரை பார்த்ததும் ஓட முயன்ற அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாமக்கல் காவல்நிலையத்தில், பதிவேடு குற்றவாளியான கார்த்திகேயன் (எ) கார்த்தி (23), தில்லைபுரம் புருசோத்தமன் (24), என்.கொசவம்பட்டி அருண்குமார் (23), தேவேந்திரபுரம் கோகுல்ராஜ் (22), அருள்பிரகாஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, கார்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தியதில், திருச்சி ரோடு, ஆண்டவர் நகரில், ஏற்கனவே பார்த்து வைத்திருந்த, 3 வீடுகளில் கொள்ளை அடிப்பதற்காக திட்டமிட்டு, அதற்காக ஒன்றுகூடியதும், கொள்ளையடிக்கும்போது யாராவது இருந்தால், அவர்களை மிரட்டுவதற்காக சூரி, கத்தி, வெட்டு கத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும், திருட்டுக்கு பயன்படுத்த வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.



