நாமக்கல்லைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் வாங்கிலி சுப்பிரமணியம், இவர் கடந்த 50 ஆண்டுகளாக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் முட்டைக்கோழி மற்றும் பிராய்லர் கோழிப்பண்ணைகள் நடத்தி வருகிறார்.
மேலும், கோழித்தீவன ஆலைகளையும், கோழி குஞ்சு பொறிக்கும் ஹேச்சரிகளையும் அவர் நடத்தி வருகிறார். தமிழகத்தின் பல இடங்களில் பிராய்லர் கோழிப்பண்ணைகளை அவர் இண்டகரேஷன் முறையில் நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார். அவருக்கு சொந்தமான அலுவலகம், நாமக்கல் திருச்சி மெயின் ரோட்டிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை சுமார் 10 கார்களில் நாமக்கல் வந்த 30க்கும் மேற்பட்ட, வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென, வாங்கிலி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்ளின் உள்ளே புகுந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் கிடைத்த விபரங்கள் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வெளியாட்கள் யாரும் அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து ரெய்டு நடைபெற்று வருகிறது.




