லாரி டயர் ரீட்ரெடிங் கட்டணத்திற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் மாதேஸ்வரன் எம்.பியிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் வரதராஜ் தலைமையில் ரீட்ரெடிங் உரிமையாளர்கள், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: டயர் ரீட்ரெடிங் மூலப்பொருட்கள் விலை உயர்வால் ரீட்ரெடிங் கட்டணம் உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் டயர் ரீட்ரெடிங் கட்டணத்திற்கு, 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ளது. அதனால் ரீட்ரெடிங் செலவு அதிகமாகி லாரி உரிமையாளர்கள் ரீட்ரெடிங் செய்வதை குறைத்து வருகின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு தரமற்ற டயர்கள் வருவதாலும், டயர் ரீட்ரெடிங் செய்வது குறைந்து வருகிறது. இதனல் இத்தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. ஏராளமான டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு இழந்து வருகின்றனர்.
தற்போது மத்திய அரசு சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. லாரி, கார் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்துள்ளது.
டயர் ரீட்ரெடிங் தொழிலை நலிவடையாமல் பாதுகாக்க ரீட்ரெடிங் கட்டணத்திற்கான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு எம்.பி. மாதேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்களுடன் மத்திய நிதியைமச்சரை சந்தித்து, தேவையான பரிந்துரைகள் செய்வதாக மாதேஸ்வரன் எம்.பி. உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் ரீட்ரெடிங் சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார், நாமக்கல் சங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மல்லீஸ்வரன், துணைத் தலைவர்கள் தர்மலிங்கம், லோகேந்திரன் இணைச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




