வீட்டு மின் இணைப்புக்காக ரூ. 5,500 லஞ்சம் வாங்கி, கைது செய்யப்பட்ட மின் வாரிய அலுவலரகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மொளசியை சேர்ந்தவர் நவநீதன் (36). எலக்ட்ரீசியன். அவரது தாயார் ஜானகி என்பவருக்கு சொந்தமான 81 சென்ட் நிலத்தில் வீடு கட்டி உள்ளார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, கடந்த, ஜூன், 6ம் தேதி, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டணம் ரூ. 13,300 செலுத்தினார்.
ஆனால், மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதையொட்டி, எர்ணாபுரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். அங்கு, பணியாற்றி வரும் குருக்கபுரம் எல்லப்பாளையத்தை சேர்ந்த லைன் இன்ஸ்பெக்டர் மாது (57), தளிகையை கேங்மேன் விவேகானந்தன் (41) ஆகியோர், தங்களுக்கு ரூ. 5,500 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என, நவநீதனிடம் கேட்டுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத நவநீதன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைபடி, கடந்த, 20ம் தேதி, பகல் 12:30 மணிக்கு, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் ரோட்டில், பவுடர் தடவிய பணத்தை நவநீதன் கேங்மேன் விவேகானந்தனிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., (பொ) ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர், கையும் களவுமாக விவேகானந்தனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், லைன் இன்ஸ்பெக்டர் மாதுவையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட, லைன் இன்ஸ்பெக்டர் மாது, கேங்மேன் விவேகானந்தன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் உத்தரவிட்டுள்ளார்.




