Close
மார்ச் 7, 2026 4:22 மணி

தவெக தலைவர் விஜய் நாளை நாமக்கல் வருகை: தொண்டர்களுக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடுகள் அறிவிப்பு

விஜய்

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நாளை 27ம் தேதி காலை 8.45 மணிக்கு, நாமக்கல் நகரில் சேலம் ரோட்டில் கே.எஸ். தியேட்டர் அருகில், பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் கரூர் செல்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் சிறப்பாக செய்து வருகின்றனர். நாமக்கல் சேலம் ரோடு முழுவதும் பிரமாண்டமான கட்சிக்கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, தவெக தலைமைக் கழகம் தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார். தவெக, தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் கட்சி என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும்.

கட்சித் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் டூ வீலர்களிலோ மற்ற வாகனங்களிலோ பின் தொடரக் கூடாது.

நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள். காம்பவுண்டு சுவர்கள், மரங்கள், மின்விளக்குக் கம்பங்கள் டிரான்ஸ்பர்மர்கள், வாகனங்கள், கொடிக் கம்பங்கள். சிலைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களின் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள். உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் காணலாம்.

நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கட்சித் தோழர்கள் தவிர்க்க வேண்டும்.

வாகனங்களை நிறுத்தும்போது, போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் நிறுத்த வேண்டும்.

பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வகையில் அனைவரும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ. அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

தலைவர் விஜய் வருகையின் போதும், நிகழ்ச்சியின் போதும் கட்சியினர் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்

என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top