காஷ்மீர் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளை கடுமையாக சாடிய இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் “அபத்தமான நாடகங்களில்” ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியது.
பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவது போல, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தனது உரையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். “காஷ்மீர் மக்களுக்கு நான் அவர்களுடன் நிற்கிறேன், பாகிஸ்தான் அவர்களுடன் நிற்கிறது என்று உறுதியளிக்க விரும்புகிறேன், விரைவில் ஒரு நாள் காஷ்மீரில் இந்தியாவின் கொடுங்கோன்மை முடிவுக்கு வரும். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ஒரு பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு மூலம் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்று கூறினார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கண்டிப்பதாகவும், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் போன்ற வெளிநாட்டு ஆதரவு குழுக்கள் தனது நாட்டை குறிவைப்பதாகவும், எந்தவொரு நபருக்கும் அல்லது எந்த மதத்திற்கும் எதிராக வெறுப்பு பேச்சு, பாகுபாடு அல்லது வன்முறைக்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
ஐ.நா.வில் ஷெரீப்பின் உரைக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தூதர் பெட்டல் கெலோட் கூறியதாவது: இந்தக் கூட்டத்தில் காலையில் பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து அபத்தமான நாடகங்கள் அரங்கேறின. அவர் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தினார். அதுதான் அவர்களின் வெளியுறவுக் கொள்கையின் மையப் புள்ளி. இருப்பினும், எந்த அளவிலான நாடகமோ, எந்த அளவிலான பொய்களோ உண்மைகளை மறைக்க முடியாது.
ஏப்ரல் 25, 2025 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமான படுகொலையை நடத்தும் பொறுப்பிலிருந்து, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத அமைப்பான எதிர்ப்பு முன்னணியை பாதுகாத்த அதே பாகிஸ்தான் இதுதான்.
பயங்கரவாதத்தை நிலைநிறுத்தி ஏற்றுமதி செய்யும் பாரம்பரியத்தில் நீண்ட காலமாக மூழ்கியுள்ள பாகிஸ்தான், அந்த நோக்கத்திற்காக மிகவும் அபத்தமான கதைகளை முன்வைப்பதில் வெட்கப்படவில்லை.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்குதாரர் போல் நடித்துக்கொண்டு, பத்தாண்டு காலமாக ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததை நினைவு கூர்வோம். அதன் அமைச்சர்கள் சமீபத்தில் தான் பல ஆண்டுகளாக பயங்கரவாத முகாம்களை நடத்தி வருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த முறை அதன் பிரதமர் மட்டத்தில் இந்த இரட்டை வேடம் மீண்டும் தொடர்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் பங்கை மறைக்கும் முயற்சிகள் என்று கூறினார்.




