திமுகவுக்கும் பாஜவுக்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளது, பொதுமக்கள் திமுகவை நம்பவேண்டாம் என தவெக கட்சித்தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் பேசினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். அதன் அடிப்படையில் 3வது நிகழ்ச்சியாக நேற்று நாமக்கல்ல்லில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அவர் வந்தார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், அங்கிருந்து கார் மூலம் தொட்டியம் வழியாக மேய்க்கல்நாய்க்கன்பட்டி வந்தார். பின்னர் அங்கிருந்து தனது பிரச்சார வாகனத்தில் அவர் நாமக்கல் வந்தார்.
மேய்க்கல்நாய்கன்பட்டியில் இருந்து நாமக்கல் சுமார் 25 கி.மீ தூரம் உள்ளது. வழக்கமாக காரில் வந்தால் அரை மணி நேரத்தில் வந்து விடலாம். ஆனால் அவரது பிரச்சார வாகனம் நாமக்கல் வந்து சேர சுமார் 2.30 மணி நேரம் ஆனது. வழி நெடுகவும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும், அவரது வாகனத்தைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் நடந்தும், டூ வீலர்களிலும், கார்களிலும் வருகை தந்ததால் 25 கி.மீ தூரம் அவரது பிரச்சார வாகனம் ஊர்ந்து வந்தது.
நாமக்கல், சேலம் ரோட்டில், கே.எஸ் தியேட்டர் அருகில், காலை 8.45 மணிக்கு அவர் பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காலை 7 மணி முதலே ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நாமக்கல் மெயின் ரோடு, திருச்செங்கோடு ரோடு, சேலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திரளாக கூடியிருந்தனர்.
கொளுத்தும் வெயிலிலும், சுமார் 7 மணி நேரம் அவர்கள் காத்திருந்தனர். நாமக்கல் நகரம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், நகருக்குக்குள் வரும் பஸ், கார், லாரிகள், டூ வீலர்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
மதியம் 2 மணிக்கு பிரச்சார இடத்திற்கு வந்து தவெக தலைவர் விஜய், தனது பிரச்சார வாகனத்தில் இருந்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டம், லாரி பாடி பில்டிங் தெழில் மற்றும் முட்டை உற்பத்தி செய்யும் கோழிப்பண்ணை தொழில் நிறைந்த மாவட்டம். சத்தான முட்டை கொடுக்கும் நாமக்கல், தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற பாடலை பாடி, தமிழ் உணர்ச்சி மற்றும் வீரத்தை ஊட்டிய நாமக்கல் கவிஞர் பிறந்த மண்ணாகும்.
மேலும் தமிழநாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பெற்றதே, திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த, சென்னை மாகானத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன்தான்.
திமுக அரசு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால், நாமக்கல் மாவட்டத்திற்கு அதை செய்வோம் இதை செய்வோம்னு சொன்னாங்களே, செஞ்சாங்களா?., ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியங்கி சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். உலர்களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்கள், கொப்பரை தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்யும், அதில் இருந்து தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்து ரேஷன்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும், ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும் அல்ல. போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஏராளமான வாக்குறுதி அளித்த திமுக அரசு நிறைவேற்றியதா?
இப்ப நாம நாமக்கல் மாவட்டத்திற்கு வருவோம். ஒரு நாளைக்கு, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிற இந்த நாமக்கல் மாவட்டத்தில அந்த முட்டைகள் வீணாகாமல் பாதுகாப்பாக வைக்க ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட முட்டை சேமிப்பு கிடங்குகள் அமைக்கணும் என்ற கோரிக்கையும், பாக்டீரியா மற்றும் வைரலாஜி பரிசோதனைகள் மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக இருக்கு.
ஆனால், அதை இதுவரைக்கும் ஆண்ட கட்சிகளும் சரி, இப்ப ஆளும் கட்சிகளும் சரி, அதுகுறித்து கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. அப்புறம் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான ஒரு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு சம்பவத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவங்கதான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறதா சொல்றாங்க. அதுவும், விசைத்தறியில் வேலைபார்க்கிற ஏழை பெண்களை குறிவைத்து, அந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது.
இதுல ஈடுபட்டிருக்கிறவங்க யாரா இருந்தாலும், நம்ம ஆட்சி அமைஞ்சதும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்த கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் எங்கு இருக்கிறதுனு பார்த்தீங்கினா. கந்துவட்டி கொடுமையில் இருக்கு.
அதாவது, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் இந்த ஏமாற்று மாடல் தி.மு.க., அரசு மேம்படுத்தாததால், அவர்கள் கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாங்க. இது எவ்வளவு பெரிய கொடுமை. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த தேவையான தீர்வுகளை யோசித்து, உறுதியா எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்வோம், செய்வோம்.
எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ அதைமட்டும்தான் சொல்வோம். அதைமட்டும்தான் செய்வோம். அதில் ஒன்று இந்த பாசிச பா.ஜ., அரசுடன் எப்பவுமோ நாங்க ஒத்துபோக மாட்டோம். இரண்டாவது, இந்த தி.மு.க., அரசு மாதிரி அண்டர் கிரவுண்ட் டீலிங் மறைமுக உறவுக்காரர்களாக இந்த பா.ஜ.,வோடு எப்பவும் இருக்க மாட்டோம். மூணாவது, மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா அம்மா அம்மானு சொல்லிகிட்டு, ஜெயலலிதா மேடம் சொன்ன அந்த விசயத்தை டோட்டலா மறந்துட்டு ஒரு பொருந்தா கூட்டணி அமைச்சிகிட்டு, கேட்டா, தமிழ்நாட்டோ நலனுக்காக இந்த பா.ஜ.,வோட கூட்டணி வைச்சிருக்கிறோம்னு சொல்றாங்களே. அவர்கள் மாதிரி நாங்க இருக்க மாட்டோம்.
இந்த பா.ஜ., அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது. நீட்டை ஒழிச்சிட்டாங்களா, கல்விக்கு தேவையான அந்த நிதியை முழுசா கொடுத்துட்டாங்களா, இல்லை தமிழ்நாட்டுக்கு தேவையான எல்லா விசயத்தையும் சரியா செஞ்சிட்டாங்களா. அதற்கு எதுக்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று, எம்ஜிஆரோட உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர்.
அ.தி.மு.க., பா.ஜ., நேரடி உறவுக்காரங்கன்னு எல்லோருக்கும் தெரியும். அவங்களோடு கூட்டணி மேல மக்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லைனு தெரியும். ஆனா, அதே நேரம், இந்த தி.மு.க., குடும்பம் பா.ஜ.,வோடு அண்டர் கிரவுண்ட் டீலிங், மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறதை தயவு செய்து மறந்திடாதிங்க.
அடுத்த ஆண்டு வரப்போற தேர்தல்ல, நீங்க தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டீங்கண்ணா, அது பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்ட மாதிரி. வெளியில் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிக்குவாங்க ஆனா, உள்ளுக்குள்ளே உறவு. இந்த கட்சி வேணாம் மக்களே, யோசிங்க.
2026ல் தேர்தல் என்பது, மாபெரும் சக்தி கொண்ட எளியோரின் குரலா இருக்கிற டி.வி.கே. மற்றும் கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாத்திகிட்டு, கொள்ளை அடிச்சிகிட்டு, தமிழ்நாட்டை ஏமாத்தற டி.எம்.கே., இந்த ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டி.
இப்படி ஒரு மோசமான ஆட்சியை கொடுக்கிற தி.மு.க., மறுபடியும் ஆட்சிக்கு வருனுமா. உங்க உண்மையான மக்களாட்சி, மனச்சாட்சி உள்ள மக்களாட்சி வரனுமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.
நண்பா, நண்பி, தோழா, தோழி என்மீது, இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், என்னை இவ்வளவு நம்புகின்றீர், ஒரு கை பார்த்திரலாம். சத்தியமா சொல்றேன், கான்ஃபிடண்டா இருங்க மக்களே. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.




