தமிழகப் பொருளாதார சங்கத்தின் 45 வது ஆண்டு மாநாடு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மாதவி தலைவர் வகித்தார்.
ஏஇடி அமைப்பின் தலைவர் லியேனார்ட், இணைத் தலைவர் பால்ராஜ், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மத்திய மாநில நிதி உறவுகள், நிலைத்த அபிவிருத்திக் குறிக்கோள்கள், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை மையமாகக் கொண்ட பிராந்திய பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
சென்னை எம்ஐடி பேராசிரியர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவுகளை ஆராய்வதில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாநிலத் திட்ட ஆணையம், வளர்ச்சியின் திசையையும் தரத்தையும் வடிவமைக்கும் முக்கியக் கடமையை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, நிலையான முன்னேற்றம், மற்றும் சமூக நலன் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த நிலையில் செயல்பட வேண்டும். வளர்ச்சியின் பலன்கள் எல்லா சமூகத்தினருக்கும் சமமாகச் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் கொள்கை.
அறிவியல் ஆய்வுகள், தரவின் அடிப்படையிலான பகுப்பாய்வுகள், மற்றும் ஆராய்ச்சியின் வழிகாட்டுதலால் மட்டுமே நல்ல கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். இதற்காக எம்ஐடி போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய கல்விச் சந்திப்புகள் தான் எதிர்காலத் தலைமுறையை வழிநடத்தும் அடித்தளமாக இருக்கும் என்று கூறினார்.
மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 187க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்று பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




