Close
மார்ச் 7, 2026 4:25 மணி

பிரதமர் மோடி கேரள முதலமைச்சர் பினராயி சந்திப்பு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனிடையே வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக ரூ.2,220 கோடி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் நிவாரணமாக வெறும் ரூ. 260 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்பின்னர் கேரளத்துக்கு இதுவரை நிதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் புதுடில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். மோடியுடனான சந்திப்பின்போது, வயநாடு நிலச்சரிவு தொடர்பான மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ. 2,221.03 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதி விடுவிக்குமாறு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், கோழிக்கோடு கினலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும், கடன் பெறுவதில் கேரள அரசுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, இந்தக் கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவையும் முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமரிடம் அளித்தார்.

முன்னதாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்துப் பேசினார்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த பினராயி விஜயன், கேரளாவின் நிதி நிலைமை குறித்து விளக்கி. தடையற்ற நலன் மற்றும் வளர்ச்சி முயற்சிகளை உறுதிப்படுத்த, கடன் கட்டுப்பாடுகளை எளிதாக்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி. தொடர்பான வருவாய் இழப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தது கேரளாவின் உள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் திட்டங்கள் குறித்து மனு அளித்தார். மேலும், கண்ணூர் மற்றும் வயநாடு பகுதிகளை தீவிர இடதுசாரி பயங்கரவாதத்தால்  பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் இருந்து நீக்கிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து கேரளாவின் முக்கியச் சுகாதார முன்னுரிமைகள் குறித்து மனு அளித்தார். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள எய்ம்ஸ் கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்..

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து, கேரளாவின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு விரைவுபடுத்தப்பட வேண்டியதன் அவசரத் தேவை குறித்துப் பேசினார்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top