திருவண்ணாமலை தூய்மை அருணைசார்பில், 10 பேட்டரி வாகனங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாநகராட்சிக்கு வழங்கினார். பின்னர், மாட வீதியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.
தூய்மை அருணை திட்டத்திற்கு 4 மேற்பார்வையாளர்களும், 39 வார்டுக்கு 39 ஒருங்கிணைப்பாளர்களும், மாட வீதி தூய்மைப்பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும், ஒவ்வொரு வார்டுக்கும் 25 தூய்மைக் காவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூர்வாருதல் என செயல்பட்டு வருகின்றனர்.
கிரிவலப்பாதையில் உள்ள 20 குளங்களை தூய்மை அருணை அமைப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைப்பது என தீர்மானிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை , அண்ணாமலையார் திருக்கோயில் எதிரில், தூய்மை அருணை சார்பில், 10 பேட்டரி வாகனங்கள் தூய்மை பணிக்காக மாநகராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சரும், தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களை மாநகராட்சிக்கு வழங்கினார்.
பின்னர், வார்டு-16, தேரடி வீதியில் நடைபெற்ற தூய்மை பணிகளையும், காந்தி சிலை அருகில் வார்டு எண்- 13 சார்பில் நடைபெற்ற தூய்மைபணியையும், வார்டு- 7 பேகோபுரத் தெருவில் நடைபெற்ற தூய்மைப் பணியையும்,வார்டு-14 பேகோபுரத் தெரு, சக்தி திரையரங்கம் அருகில் நடைபெற்ற தூய்மை பணியையும், பின்னர் வார்டு-15, திருவூடல் தெருவில் நடைபெற்ற தூய்மை பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், திருமஞ்சன கோபுரத் தெருவில் தூய்மை காவலர்களுடன் தேநீர் அருந்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூய்மைப் பணியில் தூய்மை அருணையின் மேற்பார்வையாளர்கள் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை. எம்.பி., ஶ்ரீதரன், கார்த்திவேல்மாறன், ப்ரியா விஜயரங்கன், மேயர் நிர்மலா வேல்மாறன், துணைமேயர் ராஜாங்கம், குணசேகரன், ஆணையாளர் செல்வபாலாஜி, பொதுப்பணித்துறையின் கோட்டப் பொறியாளர்கள் முரளி, ஞானவேல், ஒருங்கிணைப்பாளர்கள் ஜீவரேகா விஜயராஜ் உட்பட ஆயிரக்கணக்கான தூய்மைக்காவலர்கள் கலந்து கொண்டனர்




