திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே 11 குழு வட்டார அளவிலான நடைபெற்ற போட்டிகளில் முதல் இரண்டு இடம் பிடித்து வெற்றிப்பெற்ற 307 பள்ளிகளை சேர்ந்த 661 மாணவர்களும், 651 மாணவிகளும் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர்.
இதில் 100மீ, 200மீ, 400மீ, 600மீ, 800மீ, 1500மீ மற்றும் 3000மீ ஓட்டப் போட்டிகளும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடைத்தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் என பல்வேறு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்றும் மற்றும் இன்றும் நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் வெற்றிப்பெற்று முதல் இரண்டு இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
மாவட்ட ஆட்சியர் தடகள விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 3000மீ ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கிஷோர் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற பத்தியாவரம் செயிண்ட் ஜேசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நவீன், மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த யுவராஜ்,
17 வயதிற்கு உட்பட்டோருக்கான 3000மீ ஓட்டப்போட்டிகளில் முதலிடம் பிடித்த செய்யார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பள்ளியை சேர்ந்த தமிழ்செல்வன், 2-ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்ற திருவண்ணாமலை வி.டி. எஸ் ஜெயின் பள்ளியை சேர்ந்த கோகுல், 3-ஆம் இடம் பிடித்த ஜவ்வாது மலை, குனியாத்தூர் பழங்குடியின பள்ளியை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சுகப்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜோதிலட்சுமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் மற்றும் துறைச் சார்ந்த கலந்து கொண்டனர்.




