Close
மார்ச் 7, 2026 1:24 மணி

இந்த நிதியாண்டில் இந்திய தோல் தொழிலுக்கு வருவாய் 10-12% குறைய வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய உயர் வரிகளால், இந்தியாவின் தோல் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தொழில்துறையின் வருவாய், இந்த நடப்பு நிதியாண்டில் 10 முதல் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று முன்னணி தர நிர்ணய முகமையான கிரிசில் ரேட்டிங் எச்சரித்துள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த சூழலில், ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50% வரி விதித்துள்ளது. இது இந்திய ஏற்றுமதியின் அளவை கடுமையாகக் குறைக்கும் என்று கிரிசில் தெரிவித்துள்ளது.

தோல் துறையின் மொத்த வருவாயில் சுமார் 70% ஏற்றுமதியைச் சார்ந்தே உள்ளது. இதில் ஐரோப்பிய யூனியனுக்கு  50%-க்கு மேலாகவும், அமெரிக்காவிற்கு 22% வரையிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அமெரிக்கா விதித்த 50% வரிச்சுமை காரணமாக, இந்தியப் பொருட்கள் கம்போடியா, இத்தாலி, வியட்நாம், மற்றும் பிரான்ஸ் போன்ற மற்ற ஏற்றுமதி நாடுகளை விட அதிக விலையில் விற்கப்படுகின்றன. இந்த நாடுகளில் அமெரிக்க வரி 15% முதல் 20% வரை மட்டுமே உள்ளது.

50% வரி அமலுக்கு வந்த பிறகு, அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அமெரிக்காவிற்கு அதிக ஏற்றுமதி செய்யும் பல சிறிய தோல் உற்பத்தி அலகுகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுவிட்டன என்றும் கிரிசில் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிரிசில் ரேட்டிங் இயக்குநர் கூறுகையில், அமெரிக்காவில் ஆர்டர்களை இழந்ததால், ஏற்றுமதி அளவு இந்த நிதியாண்டில் 13-14% குறைய வாய்ப்புள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பெரும்பாலானவை காலணிகள் மற்றும் தோல் அணிகலன்கள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட முடிக்கப்பட்ட தோல் பொருட்கள் என்பதால், வருவாய் இழப்பு மிகக் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்றுமதிக் குறைவு காரணமாக, இத்தொழில்துறையின் இயக்க இலாபம்  கூட 150 முதல் 200 அடிப்படைப் புள்ளிகள் வரை சரியக்கூடும்.

இந்தச் சவால்களைச் சமாளிக்க ஏற்றுமதியாளர்கள், சாதகமான வரி விதிப்பு கொண்ட பிற சந்தைகளுக்கு ஏற்றுமதியைத் திசை திருப்புதல்,  உற்பத்தியை மற்ற பகுதிகளுக்கு அவுட்சோர்சிங் செய்தல் போன்ற சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்: இருப்பினும், இந்த மாற்றங்கள் இப்போதைக்கு ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், உடனடிப் பலன் கிடைக்காது என்று கிரிசில் நம்புகிறது.

ஏற்றுமதியில் பின்னடைவு இருந்தாலும், உள்நாட்டுச் சந்தையில் சில சாதகமான சூழல்கள் உள்ளன:

தோல் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18% இலிருந்து 12% ஆகக் குறைக்கப்பட்டதால், விலைகள் சற்றுக் குறைந்து நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த்திய அரசின் வருமான வரிச் சலுகைகள் மற்றும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது போன்ற காரணங்களால், உள்நாட்டு நுகர்வு உயரும் வாய்ப்புள்ளது.

மொத்தத்தில், இந்த நிதியாண்டில் இந்தியத் தோல் தொழில்துறைக்கு அமெரிக்க வரி விதிப்பால் பெரிய சவால்கள் இருந்தாலும், பிரிட்டனுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட தாராள வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு ஆகியவை இந்த வருவாய் சரிவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top