உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் உத்தரவைப் பின்பற்றுவதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தவறியதற்காக, தெரு நாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
நாடு முழுவதும் தெரு நாய்களை நிர்வகிப்பது குறித்த நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 22 தேதியிட்ட உத்தரவை அமல்படுத்தியதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தவறிய மாநில அரசுகளை நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், அவற்றின் சொந்தப் பகுதிகளிலேயே மீண்டும் விடுவிக்கப்பட வேண்டும். ஆபத்தான நடத்தை அல்லது ரேபிஸ் உள்ள நாய்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
இருப்பினும், இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் பெரும்பாலான மாநிலங்கள் தாமதம் செய்வதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேற்கு வங்காளம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி மட்டுமே பதில்களைத் தாக்கல் செய்துள்ளன.
நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், மகாராஷ்டிராவின் புனே மற்றும் பண்டாரா, கேரளாவின் கண்ணூர், உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மற்றும் தெலங்கானாவின் வாரங்கல் போன்ற பகுதிகளில் தெரு நாய்களின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கடந்த வாரம் கேரளாவில், கண்ணூர் மாவட்டத்தில் தெருநாய்களைப் பற்றிய தெரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த ஒருவர் தாக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில், மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்தை கடித்தது, தெலுங்கானாவின் வாரங்கலிலிருந்தும் கடந்த 48 மணி நேரத்தில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
“இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுத்தும் பதில் இல்லை! நீங்கள் செய்தித்தாள்களைப் படிக்கவில்லையா? இந்தத் தாமதங்களால், நமது நாடு சர்வதேச அளவில் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது!” என்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆவேசத்துடன் கூறியது.
இந்த தாமதத்திற்கான காரணத்தை விளக்குவதற்காக, மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா நீங்கலாக மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் அனைவரும் நவம்பர் 3 ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் ஆஜராக வேண்டும் என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.




