Close
மார்ச் 7, 2026 1:24 மணி

இந்திரா காந்தி நினைவு நாளில்..,

உலகின் படுகொலையான தலைவர்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த ஏதோ ஒரு சில செயல்கள் , சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது தான் காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்திராவின் படுகொலைக்கான காரணமாக அனைவரும் சுட்டிக் காட்டியது ஒன்றுதான்.அதுதான் பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான ‘ஹர்மந்திர் ஸாகிப்’ எனப்படும் பொற்கோவிலில் நடத்தப் பட்ட ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ என அழைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை

பஞ்சாபிலுள்ள சீக்கியர்கள் தங்களுக்கென தனி நாடாக ‘காலிஸ்தான்’ வேண்டும் என நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கோரிக்கை விடுத்தனர்.. எதுவும் நடக்காத நிலையில் பிந்த்ரன் வாலே தலைமையில் உருவான தீவிர வாத அமைப்பு, பொற்கோவிலுக்குள் புகுந்து, அரசுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக அரசு கருதியது.

சீக்கிய அமைப்புகள் மிகப்பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை உள்ளே குவித்து வைத்திருந்ததாக சொல்லப்பட்டன. இதை அகற்றும் பொருட்டு நடத்திய நடவடிக்கையின் போது நூலகம் எரிந்து, வேத நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் எரிந்து சாம்பலானது

பொற்கோயில் வளாகம் சேதமடைந்தது போன்ற காரணங்களால் இந்திரா மீது சீக்கியர்களுக்கு தாங்க முடியாத வெறுப்பு ஏற்பட்டது.

இந்திரா காந்தியும் அவரது குடும்பத்தினரும் பழிவாங்கப்படுவார்கள் என பகிரங்கமாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புலனாய்வு துறையும் இதனை உறுதி செய்தது.

எனவே இந்திராவின் பாதுகாப்பு படையில் இருந்த சீக்கியர்கள் அனைவரும் விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்திரா இதை நிராகரித்து விட்டார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தன்னை சீக்கியருக்கு எதிரானவர் என்ற வலுவான நிலையை ஏற்படுத்தி விடுவதோடு, எதிர் கட்சிகளுக்கும் அது தீனி போட்டதாகிவிடும் என்று கருதினார்.

தனது விருப்பத்தின் பேரில் தன்னிடம் பத்து வருடமாக பாதுகாப்பு வீரராகப் பணி புரிந்த பியான்ந்த் சிங் போன்றோரை நம்பிக்கையுடன் நியமிக்க வலியுறுத்தினார்.

அதே பாதுகாப்பு வீரர் பியாந்த் சிங் தனது துப்பாக்கியால் இரண்டு முறை இந்திராவை நோக்கிச் சுட, அவை அவரது வயிற்றில் பாய்ந்தன. அதிர்ச்சியால் தனது முகத்தை மூட, வலது கையை தூக்கியதும், மீண்டும் சுட ஆரம்பித்தான். மீதி மூன்று குண்டுகள் பக்கவாட்டில் ஒன்றும், மார்பில் இரண்டுமாக அவரைத் துளைத்தன.

காரணம் கிடைத்தால் ஒரு இனம் தன்னோடு வாழும் மற்றோரு இனத்தை அழிக்க, மனதை உடனடியாகத் தயார் படுத்திக் கொண்டு விடுவது மானுடத்தின் மோசமான அணுகுமுறை.

எப்போதும் இம்மாதிரியான அரசியல் அல்லது கொள்கை ரீதியான மோதல்களும், கலவரங்களும் வெடிக்கின்றனவோ, அப்போதெல்லாம் பாதிக்கப்படுபவர்கள் எந்த பாவமும் அறியாத பொதுமக்கள் தான்.

இங்கிலாந்திலிருந்து சங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top