நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் வலையபட்டி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் ரஞ்சித், முதல்வர் யுக பிரியா மற்றும் குத்துச்சண்டை வீரர் பிரசாத் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 6 பிரிவுகளின் கீழ் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, தொடுபுள்ளி ஆகிய போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த, சுமார் 450 மாணவ மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல் மாவட்ட தமிழ் சங்கத்தின் செயலாளர் நாராயண மூர்த்தி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.
போட்டி ஏற்பாடுகளை சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திர குமார், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.




