நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவின்படி, பூத் ஏஜெண்டுகள் (பிஎல்ஏ2), பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகள் (பிடிஏ) ஆகியாருக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம், 6ம் தேதி, வியாழக்கிழமை நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், முனவர்ஜான், ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமை வகித்து பேசுகிறார்.
ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கான பூத் ஏஜெண்டுகள் பயிற்சிக் கூட்டம், 6ம் தேதி காலை 9 மணிக்கு, ராசிபுரம் குமரவேல் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
சேந்தமங்கலம் தொகுதிக்கான பயிற்சிக்கூட்டம் காலை 11 மணிக்கு, சேந்தமங்கலம் ஐஸ்வர்யா மஹாலில் நடைபெறும்.
நாமக்கல் தொகுதிக்கான பயிற்சிக் கூட்டம் மாலை 3 மணிக்கு, நாமக்கல் திருச்சி ரோடு ஸ்ரீ மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பயிற்சிக் கூட்டங்களில், சம்மந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட, பூத் ஏஜெண்டுகள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




