திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது . வாக்காளர் பட்டியலை பிழைகள் இல்லாமல் துாய்மைபடுத்துவதும், தகுதியுடைய வாக்காளர் எவரும் விடுபட கூடாது என்பதே இத்திருத்தத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இறந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூர் சென்ற வாக்காளர்கள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளரின் பெயர் இது போன்ற வாக்காளர்களை கண்டறிவதே முக்கிய பணியாகும்.
மேலும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள கால அட்டவணையின் படி 04.11.2025 முதல் 04.12.2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று சிறப்பு தீவிர முறை திருத்தத்தின் பணி குறித்து விவரித்து தனித்துவமான வாக்காளா் கணக்கெடுப்பு படிவத்தை (1 படிவம் மற்றும் அதன் நகல் – மொத்தம் 2 படிவம்) வழங்கி விவரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொள்வாா்கள்.
அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக வாக்காளா்களுக்கு வீடுகளில் வழங்கும் பணி நடைபெற்றது.
இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது தனி வட்டாட்சியா் (தோ்தல்கள்) தியாகராஜன், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகன்ராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.




