Close
மார்ச் 7, 2026 3:10 மணி

தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் சிப்காட் திட்டம் கைவிடப்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

மோகனூரில் நடைபெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

வருகிற சட்டசபை தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் கைவிடப்படும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் மேற்கொண்டார். மோகனூர் தாலுகா, ஊணங்கல்பட்டியில் மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள், வளையப்பட்டி பகுதியில் விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கூடாது, தமிழகத்தில் தேசிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், இயற்கை வேளாண்மையை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும், நாமக்கல் நகரில் உள்ள பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், மரவள்ளி கிழங்குக்கு உரிய விலையாக டண்ணுக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும், மோகனூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். 505 ஏக்கர் பரப்பளவில் உள்ள நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தோல் பதனிடும் தொழிற்சாலை மற்றும் சிறைச்சாலை அமைக்க கூடாது. நாமக்கல் மாநகராட்சி, வடக்கால புதூர் பகுதியில் கழிவுநீர் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் எடுத்துக் கூறினர்.

மேலும் விவசாயிகள் இது குறித்து அளித்த கோரிக்கை மனுக்களை நயினார் நாகேந்திரன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சியில் பேசியதாவது: நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கும் போது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி காணப்படுகிறது, வரும் சட்டசபை தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தால் நிச்சயம் நாமக்கல் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் திட்டம் கைவிடப்படும். நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் தோல் தொழிற்சாலையும், சிறைச்சாலையும் வராமல் தடுக்கப்படும்,

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து விட்டு அதை கொடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.  நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதமரின் விவசாய உதவித்தொகை ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், டாஸ்மாக் மதுபானக்களை மூட வேண்டும், தென்னை மற்றும் பணை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். மோகனூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் மோகனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருந்தால்தான் மத்திய அரசிடமிருந்து அதிக அளவு நிதியை பெற முடியும்.

திமுக அரசு, கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்குடன் உள்ளதால் தமிழக மக்களின் நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெரியாமல் ஓட்டு போட்டு விட்டதால் அதற்காக மிகவும் வருத்தப்பட்டு, கிராமங்களில் ஒலிக்கின்ற மக்களின் குரல், வருகிற 2026 சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும், பாஜக, அதிமுக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top